திருமணமானதை மறைத்து மனம் முடிப்பவர்களுக்கு கடும் தண்டனை


உயர்நீதிமன்றத்தில் காணாமல் போன தங்கள் பத்தாம் வகுப்பு படித்துவந்த மகளை மீட்டு தரக்கோரி அவரது பெற்றோர்கள் கொடுத்த ஆட்கொணர்வு மனு நீதிபதிகள் என் கிருபாகரன், பி வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்துள்ளது.


அப்பொழுது காணொலி காட்சி மூலம் மாணவியை ஆஜர்படுத்திய போலீசார் மாணவி ஏற்கனவே திருமணம் ஆன ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், ஆடை தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


திருமணமானதை மறைத்து இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யக் கூடிய ஆண்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


மேலும் பெற்றோர் சம்மதமில்லாமல் வீட்டை விட்டு ஓடிப்போகும் பெண்கள் திருமணம் ஆனவர்களை மணந்து கொண்டது தொடர்பாக இதுவரை எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், திருமணமானதை மறைத்து இளம்பெண்களை ஏமாற்றிய எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


மேலும் இது தொடர்பாக அடுத்த வாரத்தில் பதிலளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.