சீரகம்- பயன்கள்


சீரகம்:


உணவே மருந்து மருந்தே உணவு” என்பது தமிழ் சித்தர்கள் கண்டுபிடித்த “சித்த மருத்துவத்தின்” தலையாய கோட்பாடாகும். நமது நாட்டினர் உணவு தயாரிக்கும் போது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் பல பொருட்களை அந்த உணவில் சேர்த்தே சமைக்கின்றனர். அப்படி உணவில் சேர்க்கப்படும் பல மகத்துவம் கொண்ட ஒரு உணவு பொருள் தான் ஜீரகம். இந்த ஜீரகத்தை கொண்டு தயாரிக்க படும் ஜீரக தண்ணீரை அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதை இங்கு அறிந்து கொள்ளலாம்.


சீரகம், அசை அல்லது நற்சீரகம் (தாவர வகைப்பாடு : Cuminum cyminum) ஒரு மருத்துவ மூலிகையாகும். வட இந்தியாவில் மலைப்பகுதிகளில் அதிகம் பயிர்செய்யப்படுகிறது. தமிழகத்தில் மேட்டுப்பாங்கான இடங்களிலும் மலைப்பகுதிகளிலும் பயிர்செய்யப்படுகிறது.காய்ந்த விதைகளே சீரகம் எனப்படும்.


சீர்+அகம்=சீரகம் (Cheerakam) என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.ஏனெனில் வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. கார்ப்பு, இனிப்பு சுவையும், குளிர்ச்சித்தன்மையும் கொண்டது. இதன் மணம், சுவை, செரிமானத்தன்மைக்காக உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகிறது. இதன் புற்றுநோய் தடுக்கும் வல்லமை சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் மூலம் அறியப்பட்டு உள்ளது. ஒரு ஆய்வில் மிருகங்களில் நடத்திய பரிசோதனைகள் மூலம் ஈரல் மற்றும் வயிற்று பகுதிகளில் கட்டி வருவதை சீரகம் தடுக்கும் என தெரிய வந்து உள்ளது.



சீரகம் தண்ணீர் பயன்கள் : அஜீரணம் இரவில் நேரம் கடந்து உண்டாலும், பசி எடுப்பதற்கு முன்பே அடுத்த வேளை உணவை உண்பதாலும் பலருக்கும் வயிற்றில் உப்பசம், அஜீரணம் போன்ற தொந்தரவுகள் ஏற்படுகின்றன. இப்படியான சூழ்நிலைகளில் அரை டீஸ்பூன் ஜீரகத்தை சிறிது நீரில் போட்டு வேக வைத்து குடித்தால் அஜீரணம், வாயு தொந்தரவுகள் போன்ற அனைத்து பிரச்சனைகளும் நீங்கும்.  


தோல் பளபளப்பு : ஜீரகத்தில் மனிதர்களின் தோலில் பளபளப்பு தன்மையை அதிகப்படுத்தும் சக்தி இருக்கின்றன. எனவே தினந்தோறும் அல்லது வாரத்திற்கு ஒருமுறையாவது ஜீரகம் கலந்த தண்ணீரை பருகி வந்தால் தோலின் பளபளப்பு தன்மையை கூட்டி, இளமை தோற்றத்தை அதிகரிக்கிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.சீரக தண்ணீர் தினமும் குடித்து வருபவர்களுக்கு மூளையின் செல்கள் புத்துணர்ச்சி அடைகின்றன. இதனால் உடலில் நல்ல சுறுசுறுப்பு தன்மை ஏற்படுகிறது. சிலருக்கு எதையும் சீக்கிரத்தில் மறந்து விடும் நிலை இருக்கும் அப்படிப்பட்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறையேனும் ஜீரக தண்ணீரை பருகி வந்தால் ஞானசக்தி அதிகரிக்கும்.


நச்சு நீக்கி : நாம் உண்ணும் உணவு பொருட்களை எப்படி தூய்மை படுத்தினாலும், அதில் சிறிதளவாவது உடலுக்கு தீங்கை விளைவிக்கும் நுண்கிருமிகளும் ரசாயனங்களும் இருக்கவே செய்கிறது. எனவே வாரம் இருமுறை ஜீரக தண்ணீரை அருந்துபவர்களுக்கு அவர்கள் உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் சிறுநீர், வியர்வை வழியாக வெளியேறும். நோய் எதிர்ப்பு சக்தி ஜீரகத்தில் வைட்டமின் ஏ மாற்று வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளன. இந்த இரண்டு சத்துகளும் உடலின் வெளிப்புறதிலிருந்து வரும் நுண்ணுயிரிகளால் ஏற்படும் நோய் தொற்றை தடுக்கிறது. ஜீரக தண்ணீர் இரும்பு சத்து அதிகம் கொண்டிருப்பதால் உடலுக்கு கூடுதல் பலத்தையும் தருகிறது


தூக்கமின்மை: :ஒரு சிலர் நன்றாக உறங்க முடியாமல், தினந்தோறும் இரவில் பலமணி நேரம் விழித்திருக்கும் நிலை ஏற்படுகிறது. தூக்கமின்மை பிரச்சனை பிற்காலங்களில் பல உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்தும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் இரவு உறங்குவதற்கு முன்பு சிறிது ஜீரக தண்ணீரை அருந்தி வந்தால் தூக்கமின்மை நீங்கும்.


நீரிழிவு : நீரிழிவு நோயால் அவதியுறுபவர்கள் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஜீரக தண்ணீரை அருந்துவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வருகிறது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் ஏற்படும் புண்கள், காயங்களையும் வேகமாக ஆற்றுகிறது.


பால் சுரப்பு : குழந்தை பெற்ற பெண்கள் சிலருக்கு என்ன காரணத்தினாலோ தாய்ப்பால் சுரப்பு குறைந்து விடுகிறது. இப்படி தாய்ப்பால் சுரப்பு குறையும் காலங்களில் தொடர்ந்து காலை மாலை என இருவேளைகள் ஜீரக தண்ணீரை குழந்தை பெற்ற பெண்கள் அருந்தி வருவார்களேயானால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.


எடை குறைப்பு:  உடல் பருமன் கொண்டவர்கள் அவர்களின் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவராவிடில் பல விதமான ஆரோக்கிய குறைவுகளை எதிர்காலங்களில் எதிர்கொள்ள நேரிடும். உடல் எடையை குறைப்பதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகியவற்றோடு ஜீரக தண்ணீரையும் தினந்தோறும் சிறிதளவு அருந்தி வர உடலை எடை நன்கு குறையும்.


நாம் நம் சமையலில் அன்றாடம் சீரகம் சேர்த்து நாம் உடல் நலம் பேணுவோம்


 


தொகுப்பு மோகனா செல்வராஜ்