திருவிடைமருதூர்  -நிறைவு


திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில்


அந்த நாய் முற்பிறப்பில் ஒரு விலைமகளாக இருந்தவள். தான் செய்த பாவங்களின் பலனாக இந்தப் பிறவியில் நாயாகப் பிறந்திருந்தாள். பத்திரகிரியார் அந்த நாயைப் பாதுகாத்து வந்தார். இந்த நிலையில் பட்டினத்தார் திருவிடைமருதூர் கோயிலை அடைந்து, கிழக்கு கோபுர வாசலில் அமர்ந்து சிவபெருமானைத் தியானித்தபடி இருந்தார். ஒருநாள் பட்டினத்தாரின் பூர்வாசிரமப் பிள்ளையான மருதவாணன் ஓர் ஏழை வடிவம் கொண்டு பட்டினத்தாரிடம் பிச்சை கேட்டார். அதற்கு பட்டினத்தார், ''மேலைக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான். அங்கே செல்வாய்'' என்று கூறி அனுப்பினார்.


மருதவாணனும் மேற்கு கோபுரத்துக்குச் சென்று அங்கிருந்த பத்திரகிரியாரிடம், ''ஐயா, எனக்குப் பசியாக இருக்கிறது. கிழக்குக் கோபுரத்தில் இருந்த ஒருவரிடம் பசிக்கு அன்னம் கேட்டபோது, அவர் மேற்கு கோபுரத்தில் ஒரு குடும்பஸ்தன் இருப்பதாகச் சொல்லி என்னை இங்கே அனுப்பினார்'' என்று கூறினார்.


உடனே பதறிப்போன பத்திரகிரியார், 'ஐயோ, இந்தப் பிச்சை எடுக்கும் ஓடும், நாயும் என்னைக் குடும்பஸ்தனாக ஆக்கிவிட்டதே' என்று வருந்தி, பிச்சையோட்டை நாயின் மேல் விட்டெறிந்தார். அது நாயின் தலையில் பட்டு இறந்து போனது.


பத்திரகிரியாரின் தொடர்பு காரணமாக அந்த நாய் அடுத்த பிறவியில் காசி அரசருக்குப் பெண்ணாகப் பிறந்தாள். அவளுக்குத் திருமணப் பருவம் வந்ததும், அரசன் வரன் தேட முயன்றபோது, ``அப்பா, நான் யாருக்கும் உரியவள் இல்லை. திருவிடைமருதூர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் அமர்ந்திருக்கும் தவ முனிவருக்கே உரியவள்’’ என்று கூறினாள். அரசரும் பெண்ணின் மன உறுதியைக் கண்டு, திருவிடைமருதூருக்கு அழைத்துச் சென்றார்.


பத்திரகிரியாரைக் கண்டு வணங்கிய அரசகுமாரி, ''தங்களின் அடிநாய் வந்திருக்கிறேன். என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்'' என்று வேண்டினாள். பத்திரகிரியார் அவளை அழைத்துக்கொண்டு கிழக்குக் கோபுரத்துக்கு வந்து, தம்மை ஆட்கொண்ட பட்டினத்தாரிடம், ''குருவின் எச்சில் உண்ட நாய்க்கு இழிபிறவி எய்தலாமா? எங்களுக்கு முக்திநிலை கிடையாதா?'' என்று கேட்டார். உடனே பட்டினத்தார், ``எல்லாம் சிவன் செயல்’’ என்று கூறி, சிவபெருமானை தியானம் செய்தார். அப்போது அங்கே தோன்றிய பேரொளி, பத்திரகிரியாரையும் அரசகுமாரியையும் தன்னுள் ஐக்கியப்படுத்திக்கொண்டு மறைந்தது.       'ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்து  தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவது எக்காலம்?' என்பது போன்ற எண்ணற்றப் பாடல்களைப் பத்திரகிரியார் பாடி இருக்கிறார்.


அமைவிடம்


மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில்


இருந்து 9 கீ.மீ தொலைவில் அமைந்துள்ளது.


தென்னாடுடைய சிவனே  போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி


பக்தியுடன் மோகனா செல்வராஜ்