ஆனி அமாவாசை... சனிக்கிழமை... முன்னோர் வழிபாடு
நாளை 20.6.2020 சனிக்கிழமை ஆனி அமாவாசை.
ஆனி அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வருகிறது. மறக்காமல், முன்னோர் வழிபாட்டைச் செய்வோம்.முன்னோர்கள் மனம் குளிர்ந்து ஆசீர்வதிப்பார்கள்.
வருடத்துக்கு மொத்தம் 96 வழிபாடுகள் உள்ளன என்கிறது நூல். தமிழ் மாதப் பிறப்பு, அமாவாசை, மகாளய பட்ச காலம், கிரகண காலம் என்று மொத்தம் 96 வழிபாடுகள் செய்ய வலியுறுத்துகிறார்கள் பெருமக்கள்.
நம்முடைய தலையாயக் கடமை. அமாவாசை முதலான நாட்கள், முன்னோர்கள் ஆராதனைக்கு உரிய நாட்கள்.
மனித வாழ்க்கையில், ஒவ்வொருவருக்கும் குலதெய்வ வழிபாடும், முன்னோர் வழிபாடும் மிக மிக அவசியம்.
எனவே எதைச் செய்யாவிட்டாலும் முன்னோர்கள் ஆராதனையை, வழிபாட்டை, வேண்டுதலைச் செவ்வனே செய்ய வேண்டும். இதனால், நம் குடும்பமும் நம் சந்ததியும் சீரும் சிறப்புமாக வளரும்; நிம்மதியும் சந்தோஷமுமாக இனிதே வாழலாம் என்கிறார்கள் பெருமக்கள்.
நாளை 20ம் தேதி, அமாவாசை. ஆனி மாத அமாவாசை. சனிக்கிழமையும் கூட. அமாவாசையும் சனிக்கிழமையும் இணைந்து வரும் நாள், இன்னும் மகத்துவமானது.
இந்தநாளில் முன்னதாக, வீட்டைச் சுத்தம் செய்தும், முன்னோரின் படங்களை சுத்தப்படுத்தியும், பூக்களால் அலங்கரித்தும், தூபம் காட்டி அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோரை வணங்க வேண்டும்.
முக்கியமாக, படையல் சாதம் காகத்துக்கு உணவிடுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு நான்கு பேருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்குங்கள்.
குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். குழந்தைகள் இன்னும் இன்னும் சிறப்புடனும் செழிப்புடனும் வளர்வார்கள்.
முன்னோர்கள்ஆசீர்வாதம் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும்.
மோகனா செல்வராஜ்