திருவிக சிலையை மீண்டும் நிறுவக் கோரிக்கை


மதுரையில் மேம்பாலப் பணிக்காக எடுக்கப்பட்ட திருவிக சிலையை மீண்டும் நிறுவக் கோரிக்கை


மதுரையில் சட்டப் பேரவை, நாடாளுமன்றம், மாநகராட்சி என்று எந்தத் தேர்தல் வந்தாலும் வேட்பாளர்கள் கொடுக்கிற முக்கியமான வாக்குறுதிகள் இரண்டு. மதுரை கோரிப்பாளையத்திலும், காளவாசலிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலம் கட்டுவேன் என்பதே அது. கடந்த 20 ஆண்டுகளாக இந்த வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டு வந்தாலும், பணிகள் மட்டும் நடந்தபாடில்லை.


காளவாசல் மேம்பாலம் கட்டுமிடத்தில் திருவிக சிலை இருந்தபோதிலும், அதனை அகற்றிவிட்டு பாலம் கட்டும் பணி தொடங்கியது. 54.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காளவாசல் மேம்பாலத்தை நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். ஆனால், திருவிக சிலை மீண்டும் நிறுவப்படவில்லை.


இந்த நிலையில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் வழக்கறிஞருமான பசும்பொன் பாண்டியன் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் ஒரு மனு அளித்தார்.


அதில், ''மதுரை காளவாசலில் இருந்த திரு.வி.கல்யாண சுந்தரனார் சிலை, உலகத் தமிழ் மாநாட்டின்போது அன்றைய முதல்வர் எம்ஜிஆரால் நிறுவப்பட்டதாகும். பாலப் பணிக்காக அகற்றப்பட்ட அந்தச் சிலையை, பால வேலைகள் முடிவடைந்து விட்டதால் மீண்டும் அதே இடத்தில் நிறுவி மரியாதை செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.