சென்னை: குணமடைந்த இளைஞருக்கு மீண்டும் கொரோனா
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, குணமடைந்து வீடு திரும்பிய சென்னை இளைஞர் ஒருவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கடந்த மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த சிகிச்சையின் பலனாக அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவருக்கு குடல் அழற்சி ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. அந்தச் சோதனையின் முடிவில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அவருக்கு இன்று மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து , அந்த இளைஞர் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.