திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் - 5


திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்-  5


`பத்திரகிரியார்’ என்ற பெயரில் பட்டினத்தாரின் சீடராக இருந்தவரின் இயற்பெயர் பத்ருஹரி. உஜ்ஜனியின் மாகாளம் என்ற பகுதியின் அரசராக இருந்தவர். அரசராக இருந்தாலும், சிவபக்தியில் சிறந்தவர். ஒரு நாள் அவருடைய அரண்மனையில் புகுந்த திருடர்கள், விலையுயர்ந்த ஆபரணங்களை எல்லாம் கொள்ளையடித்துச் சென்றனர். செல்லும் வழியில் இருந்த ஒரு விநாயகர் கோயிலில், தாங்கள் கொள்ளையடித்து வந்த ஆபரணங்களில் ஒரு மாணிக்கமாலையை விநாயகருக்குக் காணிக்கையாக வீசிவிட்டுச் சென்றனர்.


அந்த மாணிக்கமாலை விநாயகரின் கழுத்தில் விழுவதற்கு பதிலாக, அங்கே நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. விடிந்ததும் கொள்ளை போன செய்தியை அறிந்த பத்ருஹரி, வீரர்களை நாலாபுறமும் அனுப்பி, கொள்ளையர்களைத் தேடச் சொன்னார்.


வீரர்களின் பார்வையில், கோயிலில் நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரையும், அவர் கழுத்தில் இருந்த மாணிக்கமாலையையும் பார்த்து, அவர்தான் திருடன் என்று நினைத்து கைதுசெய்து அழைத்துச் சென்றனர். பத்ருஹரியும் தீர விசாரிக்காமல் பட்டினத்தாரைக் கழுவில் ஏற்றும்படி உத்தரவிட்டார்.


வீரர்கள், பட்டினத்தாரைக் கழுமரத்தின் அருகே கொண்டு சென்றனர். அப்போது பட்டினத்தார், 'என் செயலாவது ஒன்றுமில்லை' என்று தொடங்கும் பாடலைப் பாடியதும், கழுமரம் தீப்பற்றி எரிந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட பத்ருஹரி ஓடி வந்து, பட்டினத்தாரின் பாதங்களைப் பணிந்து, தமக்கு தீட்சை கொடுத்து சீடராக ஏற்றுக்கொள்ளும்படி பிரார்த்தித்தார். பத்ருஹரியின் மனப் பக்குவத்தை உணர்ந்த பட்டினத்தார், அவருக்கு தீட்சை வழங்கினார். அவரே பத்திரகிரியார்.


குருவின் கட்டளைப்படி திருவிடைமருதூர் வந்து துறவு வாழ்க்கையை மேற்கொண்டார் பத்திரகிரியார். மகாலிங்கேஸ்வரர் கோயிலின் மேற்கு கோபுர வாசலில் இருந்துகொண்டு, தினமும் பிச்சை ஏற்று குருவுக்கு சமர்ப்பித்த பிறகே, தான் உண்டு வந்தார். ஒருநாள் அவர் அப்படித் தன் குருவுக்கு சமர்ப்பித்துவிட்டு, உணவை உண்ணும் வேளையில், பசியால் வாடிய ஒரு நாய் அவருக்கு முன்பாக வந்து நின்றது. நாயின் பசியைக் கண்ட பத்திரகிரியார், அதற்குச் சிறிது உணவு கொடுத்தார். அதுமுதல் அந்த நாயும் அவருடனேயே தங்கிவிட்டது.


நாளை தொடரும்


பக்தியுடன் மோகனா செல்வராஜ்