நாயன்மார்கள் : அதிபத்தர் 4


நாயன்மார்கள் : அதிபத்தர்  -   4


நெடுநேரம் கழித்து ஒரே ஒரு மீன் சிக்கியது , ஆனால் அது மகா மகா அபூர்வ மீன்.


ஆம், அதன் செதில்கள் தங்கமாய் இருந்தன, கண்களைச் சுற்றி மாணிக்கம் ஒளி வீசியது, வாலில் ரத்தினங்கள் இருந்தன. பற்களில் வைடூரியம் ஒளி வீசிற்று. தங்க சூரியன் கையில் இருப்பது போல அதிபத்தர் கையில் அப்படி மின்னியது அந்த மீன்.


ஒரே நொடியில் ஏழ்மையின் ஆழத்தில் இருந்து கோபுரத்துக்கு அதிபத்தரை தூக்கி செல்லும் மீன் அது, ஏழு தலைமுறைக்கும் அவருக்கு தேவையானதைக் கொடுக்கும் மீன் அது


கடலில் அதை அவர் பிடித்ததும் அக்கம்பக்கப் படகுக்காரர்கள் வந்தார்கள்.  இத்தோடு அதிபத்தரின் வறுமை ஒழிந்தது என்று கூவினார்கள். சிவன் அவரை கைவிடவில்லை என்றார்கள், தங்கள் வலையினை சோகமாக நொந்து கொண்டார்கள்.


அதிபத்தரின் நிலை ஒருவகையில் சிக்கலாய் இருந்தது, உடன் இருந்த மானிடரோ அதிபத்தருக்கு வாழ்வு வந்தது, சிவன் தன் பக்தரை வாழ வைத்தான் என கூக்குரலிட்டனர், இனி சிவனுக்கு ஆலயம் கட்டி அள்ளி கொடுப்பார் அதிபத்தர் என்றெல்லாம் பேச்சுக்கள் வந்தன.


அதே நேரம் வானில் இருந்து சிவனும் பார்வதியும் பூத கணங்களும் நந்தியும் அதிபத்தரை பார்த்துக் கொண்டே இருந்தனர்.


நிலைமையினை கவனியுங்கள்.


கையில் இருப்பதோ தங்கமீன், வீட்டில் இருப்பதோ கொடும் வறுமை. நிச்சயம் இது சிவனின் கருணை, சந்தேகமில்லை. நாளெல்லாம் சிறந்த மீனை அதிபத்தர் கொடுத்ததற்கு,  ஒரே மீனையும் கொடுத்த பலனுக்கு, அந்த பக்தனுக்கு சிவன் கொடுத்த பெரும் பரிசு.


ஆனால் கிடைத்திருப்பது ஒரு மீன், இதை எடுத்துச் சென்றால் அவரின் பக்தி பலன் எதிர்பார்த்தது என்றாகி விடும், இதுகாலம் காத்த தவம் போலி என்றாகி நொடியில் சரியும், தங்கமீனுக்காகத் தவமிருந்தான் அதிபத்தன் எனும் பழி வரும். அவரும் சராசரி பக்தனாகி விடுவார், பின் எங்கிருந்து தனித்து நிற்பது?


இந்தப் புள்ளியில் வசமாக சிக்கினார் அதிபத்தர்.


சிவன் புன்னகை பூக்க அவரை பார்த்து கொண்டிருந்தார், பூத கணங்களும் , பார்வதியும், தேவர்களும் நந்தியும் அவர் என்ன செய்ய போகின்றார் என இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தனர்.


ஒவ்வொருவர் மனதிலும் ஒவ்வொரு சிந்தனை.


இது பக்தியின் பரிசு என சொல்லி பெரும் கோவில் கட்டுவார் என்றது ஒரு பூத கணம், தன்னை நம்பிய பக்தனை சிவன் கைவிடவில்லை என அவர் புகழ் நிலைக்கும் என சொன்னது மற்றொரு பூத கணம்.


 "கூட ஒரு மீன் கொடுத்திருக்கக் கூடாதா நாதா.. இதென்ன விளையாட்டு " என சொல்லிக் கொண்டிருந்தார் தேவி.


அதிபத்தர் கையில் இருப்பது ஒரு மீன், அவரின் வாழ்வும் அதில்தான் இருக்கின்றது, அவர் சிவன் மேல் கொண்ட பக்தியும் அதில்தான் இருக்கின்றது.


வாழ்வா? சிவன் மேல் கொண்ட அன்பா? எதைத் தேர்ந்தெடுக்கப் போகின்றார் அதிபத்தர் என எல்லோரும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.


தொடரும்


பக்தியுடன் மோகனா செல்வராஜ்