ஆனித் திருமஞ்சனம் நடராஜர் தரிசனம். (28/06/2020) - 1


திருமண வரம், தீர்க்க சுமங்கலி பாக்கியம் அருளும் ஆனித் திருமஞ்சனம் - நடராஜர் தரிசனம்.


சிதம்பரம்: கயிலாய நாதன் சிவபெருமானுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் விரதம் இருந்து அபிஷேகத்திற்கும் சிவதரிசனம் செய்யவும் உகந்த நாட்களாக போற்றப்படுகிறது.


பூலோகக் கைலாயம் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் அழைக்கப்படுகிறது.


ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது.


சிவபெருமானின் பஞ்சசபைகளில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் ஆலயம்.


சிதம்பரம் கோயில் ஐந்து சுற்று பிராகாரங்களைக் கொண்டது. இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறை நேர் எதிரே அமையப் பெறாமல் சிறிது இடப்புறம் தள்ளி அமைந்துள்ளது.


இது மனித உடலில் இதயம் இடப்புறம் அமைந்துள்ளதை ஒத்து இருக்கிறது என்கிறது தல புராணம்.


மனித உடலை ஒத்து அமைந்துள்ளதாகக் கூறப்படும் இக்கோயிலின் கூரை, மனிதன் நாள் ஒன்றுக்கு மூச்சுவிடும் எண்ணிக்கையான 21,000 முறையைக் கணக்கில் கொண்டு அதே அளவு ஓடுகளால் வேயப்பட்டுள்ளன. மனித உடலில் ஓடும் நாடிகள் 72,000. இதே எண்ணிக்கையில் ஓடுகளைப் பதியச் செய்ய ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன.


ஆனித்திருமஞ்சனம் திருமஞ்சனம் என்றால் மகாஅபிஷேகம் என்று பொருள். ஆடலரசரான நடராஜருக்கு ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.


இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும் ஆகும். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.


பிற திருமஞ்சன நாட்களான சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும்.


பதஞ்சலி மகரிஷி சிதம்பரம் நடராஜ பெருமானை திருமூலர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகியோரால் வணங்கியுள்ளனர்.


பொன்னம்பல நாதர் அருள்புரியும் சிதம்பரத்தில் ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும்.



ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது. ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.


அதன் பின், ருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.


அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம்..


நடராஜருக்கு அபிஷேகம் அன்றைய தினத்தில் சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும்.


அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். பத்துநாட்கள் நடைபெறும் ஆனித்திலுமஞ்சன விழாவில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது.


பக்தியுடன் நாளை தொடரும்


மோகனா  செல்வராஜ்