நாயன்மார்கள் : அதிபக்தர் - 2


நாயன்மார்கள் : அதிபக்தர்    -  2


எது உன்னில் இருப்பதில் பெரிது என கருதுகின்றாயோ அதை சிவனுக்கு கொடு என்பது தான் சைவ பூமியான தமிழக தத்துவம், எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு தன்னிடம் இருப்பதில் மிக‌ச் சிறந்ததை கொடுப்பது அந்நாளில் உணர்வில் கலந்த விஷயம்.


இவரோ மீனவன், அவருக்கு கோவில் தெரியாது, வேதம் தெரியாது, சொல்லிக்கொடுப்பார் யாருமிலர், சொன்னாலும் புரியாது, விரதம் தெரியாது, யாகம் தெரியாது, வழிபடத் தெரியாது. சிவனுக்கு லிங்க உருவம் எதனால் என்றும்  தெரியாது.


அவருக்கு தெரிந்ததெல்லாம் சிவன் முழுமுதல் கடவுள், அவனே வாழ வைக்கின்றான், அவனே கடலாக ஆடுகின்றான், அவனே படகாக வருகின்றான், அவனே மீன்பிடித்து தான் வாழ உடன் இருக்கின்றான். வாழ்பவனும் அவனே, வாழ வைப்பவனும் அவனே..


அவருக்கு சகலமும் சிவன், சிவனன்றி வேறல்ல, எல்லாம் அவனே, எந்நாளும் அவனே.


அப்படி ஒரு அன்பும் , பக்தியும் சிவன் மேல் அவருக்கு இருந்தது.


அனுதினமும் பிடிபடும் மீன்களில் தலையானதை இழப்பது என்பது பெரும் விஷயம். ஆனால் சிவன் மேலான அன்பு அவரை அதை செய்ய வைத்தது, கொஞ்சமும் தயக்கமின்றி சிவன் கொடுத்தது சிவனுக்கே  என அன்போடும் மகிழ்வோடும் அனுதினமும் மிகப் பெரிய நல்ல மீனை கடலில் விட்டார்.


ஒருநாள் கூட அவர் அதில் தவறவில்லை, தன் அன்றாடக் கடமையாக அதைக் கருதினார். சுற்றி இருப்போர் பக்தியின் பித்து நிலை என்றார்கள், வாய்ப்பைத் தவறவிடும் மடையன் என்றார்கள், கடவுளின் ஆசியினை கடலில் எறியும் பைத்தியம் என்றார்கள்.


அவரோ அவர்போக்கில் தன் கடமையில் சரியாக இருந்தார். அந்த மீனின் மதிப்போ பணமோ எதுவும் அவருக்குத் தெரியவில்லை.  தன் மீன்களில் எது மிக மதிப்பானதோ , எது உயர்வானதோ அதை சிவனுக்கு கொடுப்பதில் அவருக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி, ஒரு திருப்தி.


அதில்தான் திருப்தி.


"வெறுங்கையோடு கடலுக்கு செல்கின்றேன், மீன்கள் சிவன் கொடுப்பது, அதில் மிகச் சிறந்ததை அவனுக்குக் காணிக்கை ஆக்குகின்றேன். அது சாஸ்திர மீறலா, விதிமீறலா என்பதெல்லாம் தெரியாது. என்னிடம் இருப்பதில் உயர்ந்ததைக் கொடுக்கின்றேன்" என்பது அவர் நம்பிக்கை.


தொடரும்


பக்தியுடன் மோகனா செல்வராஜ்