பாலிவுட் திரை பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு


பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஞாயிற்றுகிழமை தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வியாக இருக்கலாம் என்றும் மன அழுத்தத்தில் இருந்ததால் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல்கள் பரவின.


இது ஒருபுறம் இருக்க தபாங் 1 படத்தின் இயக்குநர் அபினவ் கஷ்யப், சுஷாந்த் சிங் மரணத்திற்கு யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனமும், சல்மான் கான், சலீம் கான், அர்பாஸ் கான் மற்றும் சொஹைல் கான் ஆகியோரே காரணமாக இருக்கலாம் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.


மேலும் இவர்களால் தன்னுடைய திரை வாழ்கையும் மிகுந்த பாதிப்படைந்தது என்றும் தெரிவித்துள்ளார். 


இந்நிலையில், நடிகர் சுஷாந்த் ராஜ்புத் தற்கொலை விவகாரம் தொடர்பாக சல்மான் கான், கரன் ஜோஹர், சஞ்சய் லீலா பன்சாலி, எக்தா கப்பூர், உள்ளிட்ட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதனையடுத்து, பாலிவுட்டில் நடைபெறும் வாரிசு திணிப்பு மற்றும் உச்ச நடிகர்களால்தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர்.


பீகாரை சேர்ந்த வழக்கறிஞர் சுதிர் என்பவர் அளித்துள்ள அந்த புகாரில், சுமார் 7 படங்களில் இருந்து சுஷாந்தை நீக்கி அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அதனால்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.