உத்தரகோசமங்கை சிறப்புகள் பகுதி 4
- அக்கினி தீர்த்தம் கோயிலுள் உள்ளது. இது தவிர, கோயிலுக்கு வௌ¤யில் பிரம்ம தீர்த்தமும்; சற்றுத் தள்ளி 'மொய்யார்தடம் பொய்கை'த் தீர்த்தமும், வியாச தீர்த்தம், சீதள தீர்த்தம் முதலியனவும் உள்ளன. கோயிலுள் மங்கள தீர்த்தமும் உள்ளது.
- திருவாசகத்தில் 38 இடங்களில் இத்தலம் புகழ்ந்து பாடப்பட்டுள்ளது.
- கீர்த்தித் திருவகவலில் "உத்தரகோச மங்கையுள் இருந்து, வித்தக வேடம் காட்டிய இயல்பும்" என்று வருந்தொடர், இத்தல புராணத்தில் 8ஆம் சருக்கத்தில் சொல்லப்படும் - ஆயிரம் முனிவர்கட்கும் இறைவன் தன் வடிவம் காட்டிக் காட்சி தந்த வரலாற்றைக் குறிப்பதாகச் சொல்லப்படுகிறது. இதையொட்டியே இத்தலத்துப் பெருமானுக்கு "காட்சி கொடுத்த நாயகன்" என்ற பெயரும் வழங்குகிறது. இதுதவிர, 'மகேந்திரம்' என்பது உத்தரகோசமங்கையைக் குறிக்கும் என்று கொண்டு, இறைவன் அம்பிகைக்கு உபதேசித்ததையே "மகேந்திரம் அதனில், சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்" என்ற தொடர் குறிப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.
- இங்குள்ள நடராசமூர்த்தி ஆதிசிதம்பரேசர் என்றழைக்கப்படுகிறார். இங்குள்ள சபை இரத்தினசபை எனப்படுகிறது.
- அருணகிரிநாதரின் திருப்புகழ் பெற்றபதி.
- தட்சிண கயிலாயம், பத்ரிகாரண்யம் (இலந்தைவனம்) வியாக்ரபுரம், ஆதி சிதம்பரம், பிரமபுரம், சதுர்வேதபுரி, மங்களபுரி முதலியன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள்.
- உள்வாயிலைத் தாண்டி பெரிய மண்டபத்தை அடைந்தால், முதல் தூணில் குவித்த கைகளுடன் சேதுபதி காட்சி தருகிறார். மற்றத் தூண்களில் பாஸ்கர சேதுபதி, ஷண்முக ராஜேஸ்வர சேதுபதி, ராஜேஸ்வர முத்துராமலிங்க சேதுபதி முதலியோர் கற்சிலைகளாகக் காட்சியளிக்கின்றனர்.
- பிரகாரச் சுவரில் திருவாசகப் பதிகங்களான பொன்னூசல், நீத்தல் விண்ணப்பம் முதலியவை கல்லில் பொறித்துப் பதிக்கப்பட்டுள்ளன.
- மூலவர் தரிசனம். சதுர ஆவுடையார்.
- சிவபெருமானுக்குத் தாழம்பு ஆகாதது, ஆனால் இங்கு அதற்கும் சாப நிவர்த்தி ஏற்பட்டதால் மங்களேசுவரருக்குத் தாழம்பு சார்த்தப்படுகிறது நினைவில் கொள்ளத் தக்கது.
- நடராசருக்குரிய ஆறு அபிஷேகக் காலங்களிலும் இச்சந்நிதியில் இறைவன் தாண்டவமாடிக் காட்சித் தரும் ஐதீகம் நடைபெறுகிறது.
- பிராகார அழகு இராமேஸவரத்தை நினைவூட்டுகிறது. தூண்களில் பிட்சாடனர், ஊர்த்துவர் சிற்பங்கள் உள்ளன.
- நடராசப் பெருமானுக்கு ஆதிசிதம்பரம் எனப்படும் அற்புதத் தனிக்கோயில், கோயிலுக்கு உள்ளேயே குளத்தின் எதிரில் உள்ளது. இக்கோயில் அகழி அமைப்புடையது. எனவே சந்நிதிக்கு உட்செல்ல மரப்படிகள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கு நோக்கிய சந்நிதி. அக்கினி மத்தியில் நடராசப் பெருமான் ஆடுவதாகச் சொல்லப்படுகிறது.
- அம்பிகை காண இங்கு அறையில் ஆடிய நடனத்தைத்தான் அம்பலவாணர், தில்லையில் அம்பலத்தில் ஆடினார் என்று சொல்லப்படுகிறது.
- இங்குள்ள கூத்தப்பிரான் - நடராசர் அதி அற்புதமானவர். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் மரகதத் திருமேனி. விலை மதிப்பிட முடியாத இப்பெருமான் ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பிலேயே அடியவர்க்குக் காட்சியளிக்கிறார்.
பக்தியுடன் நாளை தொடரும்
மோகனா செல்வராஜ்