புதுடில்லி :கொரோனா போன்ற வைரஸ் நோய்களை எதிர்க்கும் திறனை, உடலுக்கு அளிக்கும் மூலிகை மருந்து தயாரிப்பதற்கான வழிமுறைகளை, மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அவற்றை பின்பற்றி, மூலிகை மருந்துகளை தயாரித்து, சந்தைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, மத்திய ஆயுஷ் அமைச்சகம் அறிக்கை அனுப்பியுள்ளது. மாத்திரைஅதில் கூறப்பட்டுஉள்ளதாவது:மக்களின் நோய் எதிர்ப்பு திறனை மேம்படுத்த, மூலிகை மருந்துகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என, பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அதன்படி, 'ஆயுஷ் கவாத்' என்ற, உடலின் நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் மூலிகை மருந்தை தயாரித்து, சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆயுஷ் கவாத் மருந்தை, துளசி, பட்டை, சுக்கு, கருமிளகு ஆகியவற்றை பொடி செய்து தயாரிக்க வேண்டும். இதை மாத்திரையாகவும் தயாரிக்கலாம். பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இதை, ஆயுஷ் கவாத் அல்லது ஆயுஷ் குடிநீர் அல்லது ஆயுஷ் ஜோஷந்தா என்ற, மூலக்கூறு மருந்து பெயரில், தயாரித்து, விற்பனை செய்ய வேண்டும்.
இந்த மருந்து தயாரிக்க ஆர்வமுள்ள, ஆயுர்வேதா, யுனானி, சித்தா மருந்துகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கலாம்.பரிந்துரைமக்களின் ஆரோக்கிய நலன் கருதி, இந்த மூலிகை மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவை, உடனடியாக இந்த மருந்தை தயாரித்து, மக்களுக்கு கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, எய்மில் பார்மா என்ற நிறுவனம், மத்திய ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்ட பார்முலாப்படி தயாரித்த, ஆயுஷ் கவாத் பொடி மற்றும் மாத்திரையை விரைவில் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், கே.கே.சர்மா கூறியதாவது:மத்திய ஆயுஷ் அமைச்சகம் தெரிவித்துள்ள மூலிகைகள் அடங்கிய ஆயுஷ் கவாத் பொடி மற்றும் மாத்திரைகளை தயாரித்துள்ளோம். அவை, ஓரிரு தினங்களில் சந்தைக்கு வரும். நோய் எதிர்ப்பு திறன் குறைந்தவர்களைத் தான், கொரோனா பலி கொள்கிறது. இந்திய பாரம்பரிய மருத்துவத்தில், நோய் எதிர்ப்பு திறனை அதிகப்படுத்த, ஏராளமான மூலிகைகள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்