63 நாயன்மார் - சிறப்புலி நாயனார் புராணம்

“சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்.”


சிறப்புலி நாயனார் புராணம்



“திருவைந்தெழுத்தை ஓதித் தாம் புரிந்த வேள்வியைச் சிவபெருமானுக்கே தத்தம் செய்த மறையவர்.”



“இறைவரோ தொண்டருள் ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”


சிவத்தை அறிந்து கொள்ள விரும்புகிறவர்கள். முதலில் அவரின் அடியார்களின் பெருமையை உணர வேண்டும். சிவ அடியார்களின் பெருமையை எடுத்துரைக்கவே சேக்கிழார் பெரிய புராணத்தை எழுதினார். அறுபத்தி மூன்று நாயன்மார்களின் புகழை அறுபத்தி நான்காம் ஒருவர் தொகுத்தே இது.


நாயன்மார்கள் மொத்தம் 63 பேர். தொகை அடியார்கள் 9 பேர். இவர்களையெல்லாம் நமக்கு அறிமுகம் செய்து வைத்த மிகப்பெரிய அரிய பணியைச் செய்தவர் சேக்கிழார் பெருமான். இவரையும் சேர்த்து 73 நாயன்மார்களைப் பற்றி சில செய்திகளை இந்த்த் தலைப்பில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பூரிப்பு அடைகிறேன். நாயன்மார்களைத் தொடர்வோம் வாரீர்..



சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை


சிறப்புலி நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[.


பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர்.


அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார்.


பொன் கொழிக்கும் பொன்னி வளநாட்டிலே திருவாக்கூர் அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள தூயமலர்ச்சோலை, சுடர்தொடு மாடங்களிலும் மாமழை முழக்கம் தாழ மறையொலி முழக்கம் ஓங்கும்.


அகிற்புகையும், வேள்விச் சாலையிலிருந்து எழும் ஓமப்புகையும் விண்ணும், மண்ணும் பரவும். எம்பெருமானின் திருநாமம் எந்நேரமும் ஒலிக்கும். இத்தகைய மேன்மை மிக்கத் திருவாக்கூர் தலத்தில் நான்மறை ஓதும் அந்தணர் மரபிலே சிறப்புலியார் என்னும் நாமமுடைய சிவனடியார் அவதரித்தார்.


இவர் இளமை முதற்கொண்டே திருசடைப் பெருமானிடத்தும், திருவெண்ணீற்றன்பர்களிடத்தும் எல்லையில்லாப் பேரன்பு கொண்டிருந்தார்.


தினந்தோறும் திருவைந்தெழுத்தினை முக்காலமும் நியமமாக ஓதி முத்தீயினை வளர்த்து ஆனேறும் பெருமானை வழிபட்டு வந்தார்.


இவர் எண்ணற்ற வேள்விகளை சிவாகம முறைப்படி நடத்தி வந்தார்.


அத்தோடு சிறப்புலி நாயனார் விருந்தோம்பல் இலக்கணமறிந்து சிவனடியார்களை அமுது செய்வித்து அகம் குளிர்ந்தார்.


இவர் காட்டி வந்த ஈடு இணையற்ற அன்பினாலும் நெறி தவறாத அறத்தினாலும் பிறரால் தொழுவதற்குரியவரானார்.


வேள்வியும் அதனை இன்றியமையாதென்பது, குறித்த தேவாரத்தில் தொடர்ந்து வரும். "செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே" என்ற பகுதியாற் புலனாம். மாலைக்காலத்து வேள்விக்கண் மந்திரங்கள் பிரபாவம்மிக்கு விளங்குவன


ஆதலின் அவ்வேளை அவற்றின் தலைமை மந்திரமாய்த் தன்னாலேயே அவையும் வலுவுறநிற்பதாய் இவ்வஞ்செழுத்தும் பிரபாவம் மிக்கு விளங்கும் என்பது குறித்தே. "அந்தியுண் மந்திரம் அஞ்செழுத்துமே" எனத் தேவாரங் கூறிற்றன்றி, மற்றைக்கால வேள்விகட்கு அது அவசியமாகா தென்றதன்றாம் என்பது அநுபவ பாரம்பரியத்தான் அறியப்படும்.


அது அங்ஙனமாதற் கேற்ப, அளவிறந்த கொடைவளத்தால் நிதிமழை மாரி போன்றவரும், சிவனடியாரை வரவேற்றுபசரித்து மகிழும் நியமம் பூண்டவரும் ஆகிய அந்தணச் செம்மலார் சிறப்புலி நாயனாரும் அஞ்செழுத்தோதி அங்கிவேட்கும் நியமத்திலும் வழுவாது நின்று அதன் பேறாகச் சிவபெருமான் திருவடி நீழலை யடைந்தின்புற்றார்.


அது, அவர் புராணத்தில், "அஞ்செழுத்தோதி அங்கி வேட்டுநல் வேள்வியெல்லாம் நஞ்சணி கண்டர்பாதம் நண்ணிடச்செய்து ஞாலத் தெஞ்சலில் அடியார்க்கென்றும் இடையறா அன்பால் வள்ளல் தஞ்செயல் வாய்ப்ப ஈசன்தாள்நிழல் தங்கினாரே" எனவரும்.


இவ்வாறு கொன்றை வேணியர்க்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இச்சிவனருட் செல்வர், நீண்ட காலம் நிலவுலகில் வாழ்ந்தார். எம்பெருமானின் திருவடி நிழலை அடைந்து வாழும் நிலையான பேரருளினைப் பெற்றுப் புகழுற்றார்.


சிறப்புலி நாயனார் புராணம்


இறைவன்: தான்தோன்றியப்பர்


இறைவி: வாள்நெடுங்கண்ணீ


அவதாரத் தலம்: ஆக்கூர்


முக்தி தலம்: ஆக்கூர்


குருபூசை நாள்: கார்த்திகை – பூராடம்


குருபூஜை: சிறப்புலியார் நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் பூராடம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


“அறத்தினில் மிக்க மேன்மை அந்தணர் ஆக்கூர் தன்னில்
மறைப் பெரும் வள்ளலார் வண் சிறப்புலி யார் தாள் வாழ்த்திச்
சிறப்புடைத் திருச் செங்காட்டங் குடியினில் செம்மை வாய்த்த
விறல் சிறுத் தொண்டர் செய்த திருத்தொழில் விளம்பல் உற்றேன்.”


பாடல் விளக்கம்:-


சிவ அறங்களில் மேன்மை மிக்க அந்தணர் வாழும் திருவாக்கூரில் தோன்றிய வேதியரான வண்மையுடைய அச்சிறப்புலி யாரை வாழ்த்தி, திருச்செங்காட்டங்குடியில் செம்மையால் திளைக்கும் சிறுத்தொண்ட நாயனாரின் திருச்செயலைக் கூறப் புகுகின்றேன்.


இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


ஓம்  சிவாய நம  ஓம் சிவ சிவ ஓம்


திருச்சிற்றம்பலம்.


நன்றி  மோகனா  செல்வராஜ்