புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் தலைவர் கரோனாவால் உயிரிழப்பு: ஸ்டாலின் இரங்கல்


புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் தலைவரும், திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


அரசியல் பிரமுகர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் 1985-90 இல் உருளையன்பேட்டை தொகுதியின் அதிமுக எம்எல்ஏவாக இருந்தார்.


பின்னர் விலகி திமுகவில் இணைந்த இவர் 2001-2006 மற்றும் 2006-2011 ஆண்டுகளில் முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.  2012-2014 வரை புதுவை மாநில திமுக அமைப்பாளராகவும் பதவி வகித்தார்.



சுப்பிரமணியன், தற்போது மக்கள் நீதி மய்யத்தின் மாநிலத் தலைவராக இருந்தாலும் - புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளராக இருந்து முன்பு கட்சிப் பணியாற்றி - கழக வளர்ச்சிக்காகப் பெரிதும் பாடுபட்டவர். கலைஞரின் அன்பைப் பெற்றவர் என்பதை நானறிவேன். கரோனா நோய்த் தொற்றால் அவர் உயிரிழந்திருப்பது புதுச்சேரி மக்களுக்குப் பேரிழப்பு.


அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மக்கள் நீதி மய்யத் தலைவர் சகோதரர் கமல்ஹாசனுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.