காய்கறி வியாபாரிகள் கவலை


ஆசியாவின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்றான சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தை, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா நோய்த் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டது.


அதையடுத்து தமிழக அரசு, கோயம்பேடு மார்க்கெட்டில் இயங்கிக்கொண்டிருந்த பூ, பழ சந்தைகளை மாதவரம் புதிய பேருந்து நிலையத்திற்கும், காய்கறிச் சந்தையை சென்னை பூந்தமல்லியை அடுத்த திருமழிசைக்கும் மாற்றி அமைத்தது.


தற்காலிக திருமழிசை காய்கறிச் சந்தையில் மொத்த வியாபாரிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் சில்லறை வியாபாரிகள் ஏமாற்றத்துடன் திரும்பியவண்ணமாக இருக்கின்றனர்.


கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.


முழு ஊரடங்கு நாட்களில் (19/06/2020  - 30/06/2020) காய்கறிகள் விற்பனைக்கு காலை 6 மணி முதல் 2 மணி வரை அரசு அனுமதி அளித்துள்ளது.


இந்நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக திருமழிசை காய்கறி சந்தைக்கு சில்லறை வியாபாரிகள் வருவது குறைந்து, சராசரியாக நாளொன்றுக்கு 5000 டன் காய்கறிகள் விற்பனையான நிலையில்,  தற்போது 3000 டன் காய்கறிகள் மட்டுமே விற்பனையாகி உள்ளதாகவும், மீதமுள்ள 2000 டன் காய்கறிகள் தேங்கி வீணாவதாகவும் வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


மேலும், ஜூன் 21 மற்றும் ஜூன் 28 ஆகிய இரு நாட்களில் எந்தவித தளர்வுகள் இன்றி ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் காய்கறிகள் மொத்தமாக தேங்கி வீணாகும் என்றும் தெரிவித்துள்ளனர்