ஹீட்டர் தண்ணீர் சூடாகிவிட்டதா என தொட்டு பார்த்த இளம்பெண் பலி


ஹீட்டர் தண்ணீர் சூடாகிவிட்டதா என தொட்டு பார்த்த இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.


சென்னை , அம்மணி தோட்டம் பகுதியில் உள்ள சக்திவேல் என்பவரின் மகள் தான் அனிதா. 20 வயதாகும் இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்க்கிறார்.


இந்நிலையில் நேற்று காலை அவரது தாயார் தேனீர் வாங்க கடைக்கு சென்றபோது அனிதா தான் குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டு தண்ணீர் வைத்துள்ளார்.


அதன்பின் அந்த தண்ணீர் சூடாகி விட்டதா என்பதை அறிவதற்காக தண்ணீரைத் தொட்டு பார்த்துள்ளார். அப்பொழுது ஹீட்டரில் இருந்து வந்த மின்சாரத்தால் திடீரென அவர் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே விழுந்து பலியாகியுள்ளார்.


வீட்டிற்கு வந்த தாயார் மகள் சடலமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார்.


அதன்பின் அங்கு வந்த காவல்துறையினர் அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அதன்பின் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தாலும், ஹீடர் போன்ற பொருட்களை கையாளும் பொழுது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், அது போல ஹீட்டரை   வைத்துவிட்டு அது தண்ணீருக்குள் இருக்கும் பொழுது அதைத் தொட கூடாது எனவும் காவல்துறையினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.