குஷ்பு மீது பாயும் சரமாரி புகார்கள்


முதல்நாள் ஷாக்.. ரெண்டாம் நாள் சர்ச்சை.. மூன்றாம் நாள் போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் என்று குஷ்பு மீதான விவகாரம் அரசியல் களத்தை பரபரப்பாக்க வருகிறது...


பாஜகவில் சேர்ந்த குஷ்பு, மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில் பேசிவிட்டதாக அவர் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.


டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் குஷ்பு இணைந்த நிலையில்,  சென்னை வந்தார். அப்போது ஏர்போர்ட்டில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


பிறகு செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, 'காங்கிரஸில் சுதந்திரமாக பேசக்கூட அனுமதி இல்லையென்றால் அந்த கட்சி எப்படி நாட்டிற்கு நல்லது செய்யும்? சிந்திக்கக் கூடிய மூளை வளர்ச்சி இல்லாத கட்சி காங்கிரஸ்"என்று கடுமையாக விமர்சித்தார்.


டிசம்பர் 3 இயக்கம்



குஷ்பு இவ்வாறு பேசியதற்கு "டிசம்பர் 3 இயக்கம்" தனது கண்டனத்தை உடனடியாக தெரிவித்தது..


ம்மிடம் டிசம்பர் 3 இயக்கத்தை சேர்ந்த தீபக் பிரத்யேகமாக அளித்த பேட்டியில், "ஒரு கட்சியை சார்ந்தவர்கள் இன்னொரு கட்சியை விமர்சிக்கலாம்.. அது தவறில்லை.


ஆனால், மூளை வளர்ச்சியின்மை தன்மையை பயன்படுத்தி குஷ்பு விமர்சித்துள்ளது தவறு.. அதை கடுமையாக எதிர்க்கிறோம்.. இயலாமை இயற்கையின் அங்கம்.. இதுக்காக அரசியல் எதிரியை விமர்சிப்பது முறையா? இதுவா அரசியல் நாகரீகம்? குஷ்பு மன்னிப்பு தெரிவிக்கணும்" என்றார்.


முதல்நாளிலேயே குஷ்பு பேசிய பேட்டி சர்ச்சையானதால் அது விவாதப் பொருளானது.. தற்போது தமிழ்நாடு அனைத்துவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கமும் குஷ்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.. அத்துடன் குஷ்பு மீது போலீசிலும் புகார் தந்துள்ளது. இது சம்பந்தமாக அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் உள்ளதாவது:


தனது அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக பயன்படுத்தியதால் அவருடைய இந்த கருத்து மனவளர்ச்சி குன்றிய மாற்று திறனாளிகளை அவமானப்படுத்தும் சிறுமைப்படுத்தும் விதத்திலான கருத்தாகும்..


ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016 பிரவு 92 (a) பிரிவின்படி உள்நோக்குடன் மாற்று திறனாளிளை அவமானப்படுத்தும் வகையில் பொதுவெளியில் பேசுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு 6 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதமும் உண்டு.
புகார்கள்


எனவே மாநிலம் முழுவதும் தங்களுக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டக்குழுக்கள் சார்பில் உடனடியாக புகார் அளிக்கவும் காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தவும் சங்கத்தின தலைமை முடிவு செய்துள்ளது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


.