நாயன்மார்கள் 63 பேர் சண்டேசுவர நாயனார் பகுதி - 2

 



சண்டேசுவர நாயனார் பகுதி - 2


மலர்களால் சிவலிங்கத்தை அன்போடு அர்ச்சனை செய்தார். சேய்ஞ்ஞலூர் அரனாரை முருகன் வழிபட்டாற்‌பால் மண்ணியாற்றங்கரை லிங்கத்தை இன்று விசாரசருமர் வழிபட்டார். இந்த வழிபாடு தினந்தோறும் தவறாமல் நடந்து வந்தது.


இவர் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் பாலும் அர்ச்சனை செய்யும் மலரும்
சேய்ஞ்ஞலூர் பரமனின் பாதாரவிந்தங்களை அடைந்தது. அரனார் அந்தணச் சிறுவரின் அன்பிற்குக் கட்டுப்பட்டார். பெரிய திருக்‌கோயிலிலே எழுந்தளருளியிருந்த எம்பெருமான் மண்ணியாற்றங்கரையிலுள்ள இச்சிறு மண்கோயிலிலும் எழுந்தருளினார்.


இறைவன் வழிபாட்டிற்கு பால் சுரக்கும்  ஆநிரைகள்
வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட சற்றும் குறைவின்றி முன்னைவிட அதிகமாகவே பாலைப் பொழிந்தன.


ஒருநாள் விசாரசருமர் வழக்கம்‌போல் பாலைக் குடம் குடமாக லிஙகத்தின் மீது அபிஷேகம் செய்வதும் மலர்களைக் கொட்டி அர்ச்சனை செய்வதுமாக இருந்தார். இவரது ஒவ்வொரு செயலையும் நெடுநேரமாக நின்று கவனித்துக் கொண்டிருந்த அறிவிலியொருவன், வேகமாக இவரிடம் வந்து என்ன காரியம் செய்கிறாய் ? உன்னை நம்பி மாடு மேய்க்க அனுப்பினால் நீ மாட்டின் பாலை எல்லாம் வீணாக்குகிறாயே.


இது அடுக்குமா என்று கேட்டான். அவன் வார்த்த‌கைள் இவரது காதுகளிலே விழவே இல்லை. எப்படி விழும் ? இவர்தான் ஐம்புலன்களையும் அடக்கி
அருந்தவசியைப்போல் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருக்கிறாரே ! விசாரசருமர்
மவுனம் சாதிப்பது கண்டு ஆத்திரம் அடைந்த அவன் அக்கணமே ஊருக்குள் சென்று தான் மண்ணியாற்றின் கரையி‌லே கண்ட காட்சியைப் பற்றி அனைவரிடமும் கூறினான்.அனைவருக்கும் சினம் பொங்கியது. எச்சத்தனிடம் சென்றனர். விஷயத்தை விளக்கி மகனைக் கண்டிக்குமாறு கூறினர். எச்சத்தன் கடு்ம் கோபம் கொண்டான். மகனைக் கண்டிப்பதாகச் சொல்லி அவர்களை அனுப்பிவைத்தான் மகனின் செயலை மறைந்திருந்து காண்பது என்‌ற தீர்மானத்திற்கு வந்தான் எச்சத்தன்.



மறுநாள் காலை விசாரகுமார் வழக்கம்‌போல் ஆவினங்களை ஓட்டிக்கொண்டு மண்ணியாற்றின் கரைக்குப் புறப்பட்டார். எச்சத்தன் மகன் அறி‌யாதவாறு பின்னால் தொடர்ந்து சென்றார். மண்ணியாற்றின் கரையை அ‌டைந்த எச்சத்தன் அங்குள்ள ஒரு குரா மரத்தில் மீது ஏறி மறைவாக அமர்ந்து கொண்டான். விசாரசருமர் வழக்கம்போல் மண்ணியாற்றில் நீராடி நமசிவாய மந்திரம் ஜபித்து திருவெண்ணீறு பூசி மலரைக் கொய்துகொண்டு பச்சிலைகளையும் பறித்துக்கொண்டு வந்தார்.


மண்ணால் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்தார். குடம், குடமாகப் பாலைக்
கொண்டுவந்து வைத்துக் கொண்டார். வழிபாட்டைத் தொடங்கினார். விசாரகுமார் பக்தியில் ஈடுபட்டுத் தம்மை மறந்தார். உல‌கம‌ே அவரது கண்களுக்கு மறைந்தது. ஜோதி உள்ளம் அன்பினால் ‌பொங்கித் ததும்பி நின்றது. பாற்குடங்களில் பால் நுரையோடு பொங்கி வழிந்து இருப்பதுபோல் !
விசாரசருமர், ஆவாகனம் முதலிய வழிபாட்டு முறையை வகையோடு செய்யத்தொடங்கினார். பசுவின் பாலை ‌எடுத்துக் திருமஞ்சனம் ஆட்டத் தொடங்கினார்.



மகனின் வழிபாட்டு முறையைப் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தனுக்குக்
கோபம் எல்லை மீறியது. உலக மாயையிலே மூடிக்கொண்டிருந்த அவனுக்கு
அகக்கண்களும் மூடிக்கிடந்தன. பிள்ளையின் பக்திப் பண்பினை அறிய முடியாதஎச்சதத்தன் ஆத்திரத்தால் அறிவிழந்தான்.


சினத்தால் பொங்கி எழுந்தான். மரத்திலிருந்து குச்சியை ஒடித்து எடுத்துக்‌ கொண்டான். தலைக்கேறிய மமதையால் மரத்தினின்றும் வேகமாக இறங்கினான். கோலால் மகனின் முதுகில் ஓங்கி ஓங்கிப் பல தடவைகள் அடித்தான் எச்சத்தன் ! விசாரசருமருக்கு அடிபட்டும் எவ்வித உணர்வும் ஏற்படவில்லை.


பூஜையிலேயே தம்மை மறந்து இருந்தார். எச்சத்தன் அடித்ததோடு மட்டும்
நின்றுவிடவில்லை. அவன் வாயினின்றும் வசைச் சொற்கள் பல வரம்பு மீறி
வெளிவந்தன. இவையெல்லாம் விசாரசருமர் காதுகளில் விழுந்தால்தானே!
விசாரசருமர் தந்தையின் இடையூறுளைச் சற்றும் உணராத நிலையில், பூசையைத் தொடர்ந்து செய்து தள்ளினான்.


எச்சத்தனுக்கு மகனின் செயல் மேலும்
‌‌கோபத்தை உண்டுபண்ணியது. பால் நிரப்பி வைத்திருந்த திருமஞ்சனப்
பாற்குடங்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அதுவரை பூஜையில்
மெய்மறந்திருந்த பக்தர், திருமஞ்சனக் குடப் பாலைக் கொட்டிக் கவிழ்த்தது
கண்டு கோபம் கொண்டார். வழிபாட்டிற்குக் குத்தகமாக இத்த‌கைய நெறி தவறிய செயலைக் ‌செய்தது தந்தைதான் என்பதை உணர்ந்தும் சிவ அபவாதம் செய்த அவரைத் தண்டித்தார்.


அருகே கிடந்த கோலை எடுத்து குடங்களை உதைத்துத் தள்ளி
தந்தையின் கால்களை நோக்கி வீசினார். அக்கணமே கோலும் மழுவாக மாறியது. எச்சத்தன் கால்கள் துண்டுபட்டு நிலத்தில் விழுந்தன. எச்சத்தன் உயிரைஇழந்தான்.


இதுவரை நடந்தவற்றைப் பற்றி ஒன்றுமே தம் புலன்களுக்குப்
புரி‌யாத நிலையில் இருந்த விசாரசருமர் மீண்டும் சிவ வழிபாட்டில்
ஈடுபடலானார். அவ்வமயம் வானவெளியில் பேரொளி பிறந்தது. ஒளி நடுவே,
ஒளிப்பிழம்பாக இறைவன் உமாதேவியுடன் விடையின் மேல் எழுந்தருளினார்.


பக்தியால் உலகை மறந்திருந்த விசாரசருமர் பேரொளிப் பிழம்பாக காட்சியளித்த பரமனைப் பார்த்ததும் பேருவகை கொண்டார். கரம்கூப்பி நிலந்தனில் விழுந்துவணங்கி எழுந்தார். வானத்தினின்றும் வையகத்துக்கு எழுந்தருளிய பரமசிவனும்,பார்வதியும் விசாரசருமர் வாரி அணைத்து, உச்சிமோந்து மகிந்தனர்.


இறைவன் அன்பு மேலிட அவரைத் தழுவி மகனே! எம்மீது பூண்டுள்ள அன்பின் மிகுதியால் பெற்றவன் என்றும் பாராமல் மழுவால் வீழ்த்திய உன் எல்லையில்லா பக்திக்கு யாம் கட்டுப்பட்டோம். உனக்குத் தந்தையும் நானே, தாயும்நானே ! என்றுதிருவாய் மலர்ந்தார். விசாரசருமரின் கண்களிலே ஆனந்தக் கண்ணீர் பெருகியது.அம்மையப்பரின் அரவணைப்பிலே அந்தணர் குல மைந்தார் சிவப் பழமானார்.



எம்பெருமான் விசாரசருமருக்கு அருள் செய்தார். நம் அடியார்களுக்கெல்லாம்
தலைவனாகிவிட்டாய் நீ ! நாம் சூடுவனவும், உடுப்பனவும், உண்ணும் பரிகலமும் உனக்கே உரிமையாகும்படிச் செய்தோம். உனக்கு சண்டீசபதம் வழங்கினோம் என்று அருளினார் பெருமான் !


இறைவன் தம் திருமுடியிலிருந்த கொன்றை மலர் மாலையை எடுத்தார். அன்புச் சிறுவனின் கழுத்தில் தம் திருக்கைகளாலேயே
அணிவித்தார்.


சண்டிசபதம் என்பது ஒரு பதவி. எம்பெருமான், உமாதேவியார், விநாயகர்,
முருகவேல், சூரியன் ஆகிய இவர்களுக்கெல்லாம் தனித்தனியே சண்டீச பதம்
உண்டு. சண்டீசபத பதவியில் உள்ளவர்கள் அந்தந்த மூர்த்திகளை,
வழிபடுவோர்க்கு அவ்வழிபாடுகளின் பயனை அளித்து அருள் புரிவார்கள். சிவ சண்டீசபதத்தில் இருப்பவர் தொனிச் சண்டர் எனத் திருநாமம் பெறுவர்.
உருத்திரருடைய கோபாம்சத்தில் தோன்றியவரே சண்டேசுரர். (சண்டம்-கோபம்) எச்சத்தன் தான் செய்த அபசாரத்துக்குரிய தண்டனையைத் தன் மகன் கையாலேயேபெற்று, பின்னர் அவனால் பாவம் நீங்கி, சிவலோக பிராப்திøய அடைந்தான்.



விசாரசருமர் மகேசுவரனிடம் திருவருள் அணைப்பிலே என்றும் அவரது மைந்தராய் தோன்றிப் பிறவாப் புகழ் பெற்று இறைவனது திருவருட்தாளினை அடைந்தார்.


அமைவிடம்

சிவாலயங்களில் சண்டிகேசுவரர் சன்னதி, கற்பக கிரகத்தின் இடப்புறமாக கோமுகி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே அமைக்கப்படுகிறது. பொதுவாக கோமுகிக்கும், கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் இடையே அமைக்கப்படுகிறது. இந்த சண்டிகேசுவரர் சன்னதியை சுத்திவருதல் கூடாது என்பதற்காக சில சிவாலயங்களில் சன்னதியை யாரும் சுற்றாத வண்ணம் சிறு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.


விசாரசருமருக்கு சண்டிகேசர் பட்டம் தருகின்ற சிவபெருமான்



கங்கை கொண்ட சோழீசுவரம்


விசாரசருமருக்கு சண்டீசர் பதவியை தருகின்ற சிவபெருமான் சிற்பம் கங்கை கொண்ட சோழேசுவரம் சிவாலயத்தில் உள்ளது. இதில் சண்டீசர் கீழே அமர்ந்திருப்பது போலவும், அவருக்கு உமையாளுடன் இருக்கும் சிவபெருமான் தன்னுடைய கொன்றை மாலையை சூடுவதாகவும் அமைந்துள்ளது. கொன்றை மாலை சிவபெருமானுக்கு உரியதாகும்.[4] சிவபெருமான் சண்டீசர் பதவியை தரும்போது தன்னுடைய மலர்மாலை சூட்டி, தன்னுடைய பூசைப் பொருளுக்கு உரியவன் என்று கூறுகிறார். கருவறைக்குச் செல்லும் வடக்கு வாயில் படியில் இந்த சிற்பம் உள்ளது.[4] இக்கோயிலின் அர்த்த மண்டபச் சுவரில் சண்டீசர் வரலாறு நான்கு வரிசையில் செதுக்கப்பட்டுள்ளது.


குருபூஜை


சண்டேசுர நாயனாரின் குருபூஜை தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.


அம்மையான் அடிசண்டிப் பெருமானுக்கு அடியேன்.


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"


"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை   செய்திகள்  குழுவின் ஆன்மீக பயணம் தொடரும். 


நன்றி. 


பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்