உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கு - இன்று இடைக்கால உத்தரவு

 



தமிழக சட்டப்பேரவைக்கு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் எடுத்து சென்றனர். அதற்கு எதிராக அவர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனை, எதிர்த்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உட்பட 18 எம்எல்ஏக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


இதனையடுத்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பேரவை உரிமை மீறல் குழு கூட்டம் கூடியது.பின்னர் மீண்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.


இதனால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் சார்பில் உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற பரிந்துரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.


எனவே நீதிபதி ரவிச்சந்திரபாபு விலகியதை அடுத்து திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.திமுக தரப்பு வழக்கறிஞர் முறையீட்டை ஏற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒப்புதல் தெரிவித்தார்.இந்நிலையில் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்த வழக்கில் ஸ்டாலின் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் மனு மீது இன்று  இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.