சனிபகவான் பார்வை
நமது உண்மை செய்திகள்   குழுவின் ஆன்மீக பயணம்   -  சனிபகவான்



 


சனிபகவான் பார்க்கும் பாவங்கள் பாழாகிவிடும் என்றும் கூறி வருகின்றனர். ஆனால் அவ்வாறு எல்லாம் இல்லை. சனி நிற்கும் இடம் அளிக்கும் பலன்களையும் தெரிந்து கொள்ளலாம்.

 

சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன.


சனிபகவானின் தத்துவமே ஒருவர் நன்மையை செய்தால் அவருக்கு நன்மையையும் , தீமையை செய்தால் அவருக்கு தீமையும் வழங்கும் பதவியை மட்டும் வகிக்கிறார் என்பதை மக்கள் அனைவரும் உணர வேண்டும்.

 

சனி பெயர்ச்சியின் போது ஒருவரது ராசிக்கு 3, 6, 11ஆம் வீடுகளில் சனிக்கிரக சஞ்சாரம் இடம்பெறும் காலம் நற்பலன்களை அளிப்பார்

ஏழரை சனி யாருக்கு நவகோள்களிலும் ஈஸ்வரப்பட்டம் சனியைத் தவிர வேறு எந்தக் கிரகத்திற்கும் கிடையாது.

 

ஒருவரது ஜென்மராசிக்கு 1, 2, 12 ஆகிய ராசி வீடுகளில் தலா 2 இரண்டரை ஆண்டு காலம் சஞ்சரிக்கும் காலம் ஏழாரை சனி காலமாகும்.

 


ஒருவரின் ராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும்போது அர்த்தாஸ்டமச்சனி என சொல்லப்படும். 7ஆம் இடத்தில் கண்டக சனி, 8ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் போது அட்டமத்துச் சனி எனக் கூறப்படும்.

 

ஒருவரின் ஜாதகத்தில் ஜன்ம லக்னம் துலாமாகவோ, தனுசாகவோ, மீனமாகவோ அமைந்து அதில் சனி இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு உயர்வுகள் உண்டு.

 

தோற்றப் பொலிவு இருக்கும். ஒரு குழுவுக்குத் தலைமை தாங்கும் தகுதி ஏற்படும். மகரம் அல்லது கும்பம் ஜன்ம லக்னமாகி சனியானவர் அங்கே இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு விசேஷமான தகுதிகள் நன்மைகள் சிறப்புகள் எல்லாம் உண்டாகும்.

 

லக்கினத்தில்  2ஆம் இடத்தில் உள்ள சனி நிறையப் பணம் தருவார். ஆனால், அந்தப் பணத்தை இழக்கக்கூடிய சந்தர்ப்பம் ஏற்படக்கூடும். 2ல் உள்ள சனியினால் முகத்தில் நோய் அல்லது வாயில் புண் ஆகியவை உண்டாகக் கூடும். குடும்ப ஸ்தானம் என்பதால் குடும்ப வாழ்க்கை அத்தனை சிறப்பாக இருக்காது.



 


3-ஆம் இடத்தில் உள்ள சனி அறிவு, ஆற்றல் இரண்டையும் தருவார். 3ல் உள்ள சனி பலம் பெற்றிருந்தாரானால் குறைகள் எல்லாம் அகல்வதோடு மனைவியால் இன்பமும், வாழ்க்கையில் மகிழ்ச்சியும் உண்டாகும்.

லக்னத்தில் இருந்து 4ஆம் இடத்தில் உள்ள சனி அமர்ந்தால் அந்நிய தேசவாசம் ஜாதகருக்கு உண்டாகும். 5ல் சனி மக்கள் பாக்கியத்தைக் குறைப்பார். புத்திர தோஷம் உண்டாகக் கூடும். மேலும் செல்வம் சந்தோஷம் இவைகள் குறையும்.

 


6ஆம் இடத்தில் சனிக்குப் பலம் இருக்குமானால் ஜாதகர் பகைவரை வெற்றிக் கொள்வார். பலம் குறைந்த சனியினால் ஜாதகர் பகைவரால் ஒடுக்கப்படுவார். 6ல் உள்ள சனி பகைவருடைய வீட்டிலோ, நீச்ச நிலையிலோ இருப்பாரேயானால், பிறந்த குடிக்கே நாசம் தேடுவார். மேலும் வாழ்வில் சோதனையை ஜாதகர் சந்திக்கக்கூடும்.



7ல் உள்ள சனியினால் நன்மைகள் குறையும். அலைச்சல்கள் அதிகமாகும்.

8ல் உள்ள சனியால் கண்பார்வை மங்கக்கூடும். வயிற்றுக் கோளாறு உண்டாகக் கூடும். 8ல் உள்ள சனி இளம் வயதில் ஜாதகருக்கு மகிழ்ச்சியை தரமாட்டார். ஆயுளை தீர்க்கமாகக் கொடுப்பார்.

9ல் உள்ள சனியால் ஜாதகருக்குப் பணம் குவியும். மகிழ்ச்சி ஏற்படும். மக்களால் மகிழ்ச்சியுண்டாகும். 9ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டில் யோகத்தை உண்டு பண்ணுவார்.


 


10ல் உள்ள சனி ஜாதகரை பணக்காரராக்குவார். உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுப்பார். பெரிய நிர்வாகியாக விளங்குவார். 10ல் உள்ள சனி ஜாதகருக்கு வெளிநாட்டு வாசத்தை உண்டு பண்ணுவதற்கும் சந்தர்ப்பமுண்டு.

11ஆம் இடத்தில் உள்ள சனியால் ஒரு ஜாதகர் வியாபாரத் துறையில் வெற்றி பெறுவார். நிறையச் சம்பாதிப்பார். சொத்துக்கள் சேர்ப்பார் என்றாலும் குடும்பத்தில் ஜாதகருக்குச் சிறப்பை உண்டாக்க மாட்டார். ஜாதகரால் குடும்பத்தாருக்கு நலம் உண்டாகவும் விடமாட்டார்.

 


12ல் உள்ள சனியினால் ஜாதகருக்கு கடும் செலவு உண்டாகக் கூடும். அறிவாற்றல் மங்கியிருக்கும். பகைவரால் தொல்லை விளையக்கூடும். 12ஆம் இடத்தில் உள்ள சனிக்கு சுபர் பார்வை ஏற்பட்டு ஆட்சி அல்லது உச்சநிலை ஏற்பட்டிருக்குமானால், குறைகள் பெரும்பாலும் குறையும். சில நன்மைகள் தலைகாட்டும்.

ஆகையினால்  நாம் அனைவரும்  நியாயமான  முறையிலும்  நமது தாய் தந்தை  மனைவி  குழந்தைகள்  மற்றும்   அனைவரையும் பாசத்தோடும் அன்போடும்  நடத்தினால்  எல்லாம்  வல்ல இறைவன்  நமக்கு அருள் புரிவான் என்பது சந்தேகம் இல்லை. 

 

நாம் நமது கடமைகளை  சரி வர செய்து வந்தால் போதும்.  சுய லாபத்திற்காக மற்றவர்களை  துன்ப படுத்த கூடாது.  அவ செயல்  சொல் புரிதல்  தவறு. கடந்த கால  கசப்பு  நிகழ்களை  மறந்து  அன்போடும், பாசத்தோடும்   நடத்தி வந்தால் போதும்.

 

சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார்.

 

"ஓம் நமசிவாய...! சிவாய நம  ஓம்...!"


"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''




இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள்   குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.


நன்றி.


தொகுப்பு  மோகனா  செல்வராஜ்