சிகிச்சைக்காக டெல்லி சென்று திரும்பிய குத்துச்சண்டை வீரருக்கு கொரோனா!
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் சிகிச்சைக்காக டெல்லி சென்றுவிட்டு சொந்த ஊர் திரும்பிய நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மணிப்பூரை சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங் (வயது 41), இவர் 1998ம் ஆண்டு பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 2013ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதும் பெற்றுள்ளார்.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள டிங்கோ சிங் கதிரியக்க சிகிச்சைக்காக டெல்லி செல்ல இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் தேசியளவிலான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
கதிரியக்க சிகிச்சை முடிந்து சாலை மார்க்கமாக 2,400 கிமீ பயணம் செய்து மணிப்பூருக்கு திரும்பிய குத்துச்சண்டை வீரர் டிங்கோ சிங்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குடும்ப வட்டாரத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
இந்திய விளையாட்டுத்துறையில் முக்கிய வீரர் ஒருவருக்கு முதல் முறையாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பது, விளையாட்டுத்துறையினரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.